ஜெயலலிதா: தமிழகத்தை தலை நிமிர வைக்கும் புதிய சக்தியா???
இந்த பதிவை எழுதிக்கொண்டு இருக்கும் நான் ஒரு அ.தி.மு.க அனுதாபியோ அல்லது அம்மையார் ஜெயலலிதாவின் துதி பாடியோ இல்லை. நம் நாடு முன்னேறி ஒரு வல்லரசு (அண்ணன் விஜயகாந்த் படம் இல்லிங்க) ஆகப்போவது எப்போது என்ற கனவில் மிதந்து கொண்டு இருக்கும் பல கோடி இந்தியர்களில் நானும் ஒருவன். கடந்த சில மாதங்களாக சிங்கையில் இருப்பதால், சிங்கப்பூர் பற்றி சிறிது அறிந்து, இங்கே சிங்கையில் உள்ள அரசியல், அரசியல்வாதிகள், அவர்களது மக்கள் நல திட்டங்கள் பற்றி ஆச்சர்யபட்டு, இப்படி நம் நாடு இல்லையே என்று ஆதங்கப்படும் ஒரு சராசரி இந்திய தமிழன்.
விவசாயத்தை பற்றி எழுதலாம் என்று எண்ணியிருந்த எனக்கு, இன்றைய முக்கிய செய்தியாக, "ஜெ.. டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்?-மது விலக்கு அமலாகிறது??" என்ற செய்தி, இந்த பதிவை எழுத தூண்டியது.
என்னை பொறுத்தவரை, இது மிகவும் முக்கிய செய்தி மட்டும் அல்ல. தமிழக மற்றும் இந்திய அரசியல் மற்றும் (குடி)மக்களுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அப்படி என்ன திருப்புமுனை என்று கேட்க தோன்றுகிறதா?
1. ஜெயலலிதா மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்க ஒரு நல்ல வாய்ப்பு
2. “கிங் மேக்கர்” என்று சொல்ல கூடிய, பிரதமரையே தேர்ந்து எடுக்கும் சக்தியாக உருவெடுக்கலாம்
3. தமிழக தாய்மார்களின் ஏகோபித்த பேராதரவு பெற வாய்ப்பு, அது அவரை "இருக்கும்" வரை முதல்வராக இருக்க அடித்தளம் அமைக்கலாம்
4. தமிழக மக்களின் வாழ்வுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையலாம்
5. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல தீய செயல்கள் குறைய வாய்ப்பு
6. உழைப்பாளர்கள் பணம் ஒழுங்காக வீட்டிற்கு செல்ல ஒரு முயற்சி
7. ஏழ்மை, வறுமை குறைய ஒரு சந்தர்ப்பம் அமையலாம்
8. விவசாயத்தில் மறுமலர்ச்சி உருவாக்கலாம்
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனா, இடம் பத்தாது.
மொத்தத்தில், தமிழ் நாடு, குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக ஒரு நல்ல பாதையை நோக்கி போகும் என்பது என் எண்ணம்.
குஜராத் பற்றி பேசுவதால், நான் பா.ஜ.க விசுவாசி இல்லை. நரேந்திர மோடி அவர்கள் செய்த ஒரு தவறால், அவருக்கு இன்றும் அமெரிக்க விசா மறுக்கப்பட்டு வருவது எவ்வளவு பெரிய அவமானம் என்று அறிந்தவன்.
என்னுடைய நோக்கம், நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளில் யாரவது எப்போதாவது ஒரு சில நல்ல முடிவுகள் எடுக்கும்போது, அதைப்பற்றி எழுதி எனக்கு நானே சந்தோஷப்பட்டு கொள்வது.
ஜெயலலிதா அவர்கள் மிகச்சிறந்த நிர்வாகி என்பது எல்லாரும் அறிந்ததே. அறிவாளி முட்டாள் ஆவதற்கு ஒரு காரணம் போதும். அது "ஆணவம்". அதை தெரிந்து கொண்டு, அம்மையார் இது போன்ற முடிவுகள் எடுத்தால், நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
இந்த முடிவை, ஜெ. அவர்கள் அமல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன், இந்த பதிவை முடிக்கிறேன்.
டிஸ்கி: போன பதிவுல, செங்கோட்டையன் அவர்களை, அம்மா பதவியில் இருந்து தூக்கியதை கண்டித்து பதிவு எழுதியவன். இப்போ, அம்மாவை பத்தி பாராட்டுறதுக்கு காரணம், நல்லது செஞ்சா நடுநிலை மக்கள் கண்டிப்பா ஆதரிப்பாங்க. எனவே... அரசியல்வாதிகளே, கொஞ்சம் பொது நலனையும் பாருங்க.